ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சிதம்பரத்தை கைது செய்வதற்காக தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனால் சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர்.
இதனிடையே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சந்திப்பதற்காக, ப.சிதம்பரமும், கபில் சிபலும் முயன்றனர். ஆனால், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது முதல் ப.சிதம்பரம் இருக்கும் இடம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணியளவில் மீண்டும் வந்தடைந்தனர். ஆனால், எதன் அடிப்படையில் ப.சிதம்பரத்தின் தில்லி வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குர்ரானா சிபிஐ-க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியதாவது,
ப.சிதம்பரம் தில்லி இல்லத்தில் நீங்கள் ஒட்டியுள்ள நோட்டீஸில் எனது மனுதாரர் மீது எந்த சட்டத்தின் கீழ் 2 மணிநேரத்துக்குள் ஆஜராக வேண்டும் என குறிப்பிடவில்லை. மேலும் அவர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
எனவே இதன் மீது புதன்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெறும் விசாரணைக்கு முன்பாக எனது மனுதாரர் ப.சிதம்பரம் மீது சிபிஐ எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.