பொருளாதார மந்தநிலை காரணமாக நாட்டின் மிகப்பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே நிறுவனம், 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் பார்லே பிஸ்ட் நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாகவும், ஜிஎஸ்டியின் காரணமாகவும் தங்கள் நிறுவனத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை சீரடையாவிட்டால் விரைவில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பார்லே பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி மாயங்க் ஷா கூறுகையில், ரூ.5 மற்றும் அதற்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பிஸ்கெட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அந்த நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக எழுந்த பொருளாதார பின்னடைவை ஈடுகட்ட தற்போது 8,000 முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
மேலும், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகே, பிஸ்கெட் விற்பனை கடும் சரிவை சந்தித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதேப்போல, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்பட்டிருக்கும் நட்டத்தை சரி கட்ட, விலையை உயர்த்த முடியாமல், ஒரு பாக்கெட் பிஸ்கெட்டில் இருக்கும் பிஸ்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நாட்டில் பெரும்பான்மையான விற்பனை சந்தையாக இருந்த ஊரகப் பகுதிகளில் பிஸ்கெட் விற்பனை சரிந்ததாகவும் மேரி பிஸ்கெட் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.