ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது.
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு இன்று மாலை, முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு முறையீடு செய்யப்படவில்லை.
இது குறித்து சிதம்பரத்தின் வழக்குரைஞர் தரப்பில் கூறுகையில், புதிய மனுவை பதிவாளர் பட்டியலிடுவது தொடர்பான தகவல் கிடைப்பதற்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை இன்றே விசாரணைக்கு ஏற்குமாறு கபில் சிபல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், பட்டியலிடாமல் வழக்கை எவ்வாறு விசாரணைக்கு ஏற்பது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
மீண்டும் மதியம் 2 மணியளவில் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு வழக்குரைஞர் கபில் சிபல், சிதம்பரம் மனு பற்றி குறிப்பிட்டார். அப்போது, சிதம்பரம் எங்கும் ஓடிவிடவில்லை. ஆனால், அமலாக்கத் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.
அப்போதுதான், சிதம்பரத்தின் மனுவில் சில பிழைகள் இருப்பதாகவும், அதனாலேயே அதனை பட்டியலிட முடியாமல் போனதாக பதிவாளர் தெரிவித்ததாக நீதிபதி ரமணா கூறினார்.
உடனடியாக சிதம்பரத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மீண்டும் மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கபில் சிபல் அறிவுறுத்தினார். ஆனால், அதற்கும் நீதிபதி ரமணா மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், சிதம்பரத்தின் மனு வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.