தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற அமர்வில் உடனடியாக விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது கருத்தைக் கேட்காமல், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரித்து முன் ஜாமீன் வழங்குவதோ, வேறு எந்த உத்தரவையும் பிறப்பிப்பதோக் கூடாது என்று கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வைக்கும் வாதங்கள் முக்கியத்துவம் பெறலாம் என்றும், இது சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.