புது தில்லி: நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளித்ததாக சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தில்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு இன்று பிற்பகல் 3.15 மணியளவில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.
ஏற்கனவே, சிதம்பரத்தின் வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். மேலும் சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.