திக்கா: மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையோர நகரமான திகாவுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு சாலையோரம் இருந்த டீக்கடையில் சுவையான தேனீர் தயாரித்து அசத்தினார். இந்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் மம்தா பானர்ஜி, திகா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வழியில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய மம்தா, அங்கிருந்த டீக்கடைக்குள் சென்று தேநீர் தயாரித்தவாறு, அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.
இந்த விடியோ மம்தா பானர்ஜியின் டிவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேநீர் தயாரித்து அதனை மக்களுக்கும், உடன் வந்த அரசு அதிகாரிகளுக்கும் வழங்கினார். அது பற்றிய விடியோவை பகிர்ந்த மம்தா, சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதில், சுவையான தேநீர் தயாரித்து மற்றவர்களுக்கு பகிர்வதும் ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.
சமையலறையில் பணி செய்வதும், சமையல் செய்வதும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது வேலை பளு காரணமாக சமையல் செய்ய நேரமில்லை என்றும் மம்தா கூறினார்.
அந்த தேநீர் கடைக்கு வந்த பிள்ளைகளிடம் விளையாடி மகிழ்ந்த மம்தா, அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கினார்.