புது தில்லி: சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டமே குழப்பமாக இருப்பதாகவும், இந்த திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வியும் எழுப்பியுள்ளது.
சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை எதிர்த்து மத்திய நெஞ்சாலை துறை திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் மிக அவசியமான திட்டம் என்கிறீர்கள். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆகிறது என்கிறீர்கள். எனவே, இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை கேட்டுள்ளனர்.
முன்னதாக நிலத்தைக் கையகப்படுத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. மேலும், 8 வழிச் சாலைத் திட்டம் என்பது நாட்டுக்கு முக்கியமானது. எனவே, அதற்காக நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், 8 வழிச் சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர தாமதமானால் என்ன செய்வீர்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளிக்கையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 வழிச் சாலைத் திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.