பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் புதிய மைல்கல்லாக அமையும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக, நவ்தீப் சிங் புரி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இந்தியர்கள், பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவரது பயணம், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் புதிய மைல்கல்லாக அமையும். இதனால், இருதரப்பு உறவுகள் மேம்படும். ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் பதக்கத்தையும் பிரதமர் மோடி பெற உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயேத்துடன் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் அவர்கள் விவாதிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில், பிரதமர் மோடியின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அவருக்கு ஷேக் ஜாயேத் பதக்கம் வழங்கப்படுகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் அந்நாடு தெரிவித்திருந்தது. நாட்டின் அரசர்களுக்கும், அதிபர்களுக்கும், நாட்டின் தலைவர்களுக்கும் மட்டுமே இந்த விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.