உ.பி. : தலித் பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் மீது வழக்கு பதிவு
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாம்லி மாவட்டம், அகமதுநகர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூக இளம்பெண், கடந்த 2-ஆம் தேதி தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது, அங்கிருந்த ரவி, பாபன், மோனு என்ற 3 இளைஞர்கள் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டுக்கு தங்கள் நண்பர்கள் கூட்டத்துடன் அந்த மூவரும் சென்றனர். அங்கு, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அவர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, தலித் சமூக அமைப்பான பீம் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மீது, எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.