மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக அஜய் குமார் பல்லாவை நியமனம் செய்துள்ளது. அவர் வரும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான அஜய் குமார் பல்லா, மத்திய எரிசக்தித் துறை செயலராகப் பணியாற்றினார். பின்னர், உள்துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாகக் கடந்த மாதம் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
உள்துறைச் செயலராக இருந்த ராஜீவ் கெளபா, கேபினட் செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உள்துறைச் செயலர் பதவிக்கு அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.