புது தில்லி: முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை வெள்ளியன்று மிகவும் மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் மருத்துவமனை வெளியிடவில்லை.
எனினும் அருண் ஜேட்லிக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், வியாழனன்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் கேட்டறிந்தனர். நேற்று உமா பாரதி மருத்துவமனைக்கு வந்து அருண் ஜேட்லியின் உடல்நிலையை கேட்டறிந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார் அருண் ஜேட்லி. அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் வெளிநாட்டிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை வெள்ளியன்று மிக மோசமான நிலையை அடைந்ததாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.