புது தில்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார். அவருக்கு வயது 66.
உடல்நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அருண் ஜேட்லி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அருண் ஜேட்லி. அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் வெளிநாட்டிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக் குறைபாடு காரணமாகவே அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்.
ஆகஸ்ட் 9ம் தேதி முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவரது உடல்நிலை வெள்ளியன்று மிக மோசமான நிலையை அடைந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.