ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க சிபிஐயும், அமலாக்கத் துறையும் மீண்டும் மீண்டும் கோருவது இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக இதே நடைமுறையை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கடைப்பிடித்து வருகின்றன. மனுதாரர்களின் முன்ஜாமீன் குறித்து செப்டம்பர் 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை அவர்களைக் கைது செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.