காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய விவகாரம்: செப்.3-இல் தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை

தில்லி விமான நிலையத்தில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர்
காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய விவகாரம்: செப்.3-இல் தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை


தில்லி விமான நிலையத்தில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம், வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.
தில்லியில் இருந்து துருக்கி வழியாக அமெரிக்கா செல்வதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு ஷா ஃபசல் கடந்த 13-ஆம் தேதி இரவு வந்தார். அவரை, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார், பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்நிலையில், ஷா ஃபசலின் நெருங்கிய நண்பர் முகமது ஹுசைன் காதர் என்பவர், தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கச் சென்ற தனது நண்பர் ஷா ஃபசலை விமான நிலைய அதிகாரிகள் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். ஷா ஃபசலை அவர்கள் வேறு எங்கும் ஆஜர்படுத்தாமல், உடனடியாகத் திருப்பி அனுப்பிய விதம், அவரைக் கடத்தியதுபோன்றே உள்ளது. வீட்டுக் காவலில் இருக்கும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்க்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஷா ஃபசலை அவரது மனைவி, மகன், பெற்றோர் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுதாரர் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 
அதே நேரத்தில், அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்த ஷா ஃபசல், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். 
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அதை எதிர்த்து, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com