ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பயணம்

ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை சென்று அந்த மாநில மக்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பயணம்

ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை சென்று அந்த மாநில மக்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பிறகு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று அந்த மாநில மக்களை சந்திக்கவுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் ராகுலும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீதாரம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), திருச்சி சிவா (திமுக), மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), தினேஷ் திரிவேதி (திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோர் சனிக்கிழமை பிற்பகல் தில்லியில் இருந்து விமானத்தில் ஸ்ரீநகர் செல்கின்றனர். அனுமதி கிடைத்தால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் செல்ல தயாராக இருப்பதாகத் தெரிகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சமூக வலைதளமான சுட்டுரையில் திரிணமூல் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி, எதிர்க்கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களுடன் ஸ்ரீநகருக்கு சனிக்கிழமை செல்கிறார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்ய எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அங்கு செல்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களை அந்த மாநிலத்துக்குச் செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
ஸ்ரீநகர், ஜம்முவில் குலாம் நபி ஆஸாத் தடுத்து நிறுத்தப்பட்டார். டி.ராஜா, ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்று அனுமதி கிடைக்காத காரணத்தால் திரும்பினார். எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் எப்போதும் காஷ்மீர் மக்களை சந்திக்க முடியும்? என்று அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் ராகுல் காந்தி சமீபத்தில் கேட்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேண்டாம்: காஷ்மீர் அரசு
தற்போதைய நிலைமையில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வர வேண்டாம் என்று  அறிவுறுத்தி அந்த மாநில அரசு நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகை காஷ்மீர் பள்ளத்தாக்கில் படிப்படியாக திரும்பிவரும் அமைதியும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்க காரணமாகிவிடும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்கள் செல்ல முயற்சி செய்வதும் விதிமீறலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com