ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காமில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தாக்கியது, இந்திய ஏவுகணைதான் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
முன்னதாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு மறுநாள், இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. அந்த முயற்சியை, இந்திய விமானப் படை முறியடித்தது.
இதனிடையே, பட்காம் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 6 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். முதலில் இச்சம்பவம் விபத்தாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்திய வான்பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக தாக்கப்பட்டு, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது.
இதுதொடர்பாக, இந்திய விமானப் படை தரப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டது. இந்திய ஏவுகணை தாக்கியே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பான ஒரு உயரதிகாரி உள்பட 4 அதிகாரிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.