மோடியின் முந்தைய மத்திய அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அருண் ஜேட்லி செய்த பல நடவடிக்கைகள், மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைய உதவியது என்று சொன்னால் அதுமிகையில்லை.
பொருளாதார அளவில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தவர் அருண் ஜேட்லி. மோடியின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் முதுகெலும்பாக இருந்தவரும் அருண் ஜேட்லிதான்.
அதில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதோ..
ஆண்டு தோறும் பொது பட்ஜெட் என்றாலே அது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அந்த நடைமுறையை மாற்றி, பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியவர் அருண் ஜேட்லி.
இந்தியா முழுக்க ஒரு விஷயம் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றால் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இனி செல்லாது என்று மோடி அறிவித்த பிறகு நாடு சந்தித்த பல இன்னல்களையும், கடினமான காலத்திலும் நாட்டின் நிதித் துறை அமைச்சராக இருந்து கடினமான சூழ்நிலையை கவனமாகக் கையாண்டவர் அருண் ஜேட்லி.
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த, அந்நிய நேரடி முதலீடுகளை கவர பல்வேறு உத்திகளைக் கையாண்டார்.
வாராக் கடனை கண்காணித்து அதனைக் குறைத்து பொதுத் துறை வங்கிகள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்தவர் அருண் ஜேட்லி.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையை துணிச்சலோடு அறிமுகப்படுத்தி, பல்வேறு தரப்பின் ஆலோசனைகளைப் பெற்று படிப்படியாக அதனை சீர்படுத்தியவர் அருண் ஜேட்லி.
நாடு முழுக்க ஒரே முறையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தி, அதன் சாதக, பாதகங்கள் அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
பான் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைத்தது, வரி செலுத்த ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாக்கப்பட்டதும் இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே.
இதுமட்டுமா? நிதித்துறை சட்டம் இயற்றியது என பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து வழிகளையும் மேற்கொண்டவர் அருண் ஜேட்லி என்பது குறிப்பிடத்தக்கது.