நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதை மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே ஒப்புக் கொண்டு விட்டனர்; கஷ்டப்படும் மக்களுக்கு நிதியுதவி அளித்து பொருளாதாரத்தின் நிலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சரிவில் உள்ளது என்று காங்கிரஸ் நீண்ட காலமாக கூறி வந்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதை மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே இறுதியாக ஒப்புக் கொண்டுவிட்டனர். அதனால், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாங்கள் கூறும் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். பேராசையோடு இல்லாமல், ஏழை மக்களிடம் இருந்த பெற்ற பணத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.