உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எடாவா என்ற மாவட்டத்தில் உத்தரப்பிரதேச மருத்துவப் பல்கலைக்கழகம்செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. அப்போது, முதலாமாண்டு மாணவர்கள் 150 பேருக்கு மொட்டையடித்து அவர்களை ஊர்வலமாக செல்லுமாறு சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.
மேலும், ஜூனியர் மாணவர்கள் தங்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்றும் சீனியர் மாணவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இவர்கள் மீது காவல்துறையும் வழக்குப்பதிவு செய்ய இருக்கிறது. அதே போன்று ராக்கிங் செய்யத் தூண்டிய 150 சீனியர் மாணவர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர்கள் ராக்கிங்-ஆல் பாதிக்கப்பட்டதை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்காத விடுதிக் காப்பாளரும், இந்த விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கல்லூரியில் ராக்கிங் நடந்தால் அதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்கலாம். ராக்கிங் புகார்களை விசாரிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராக்கிங் மீதான நடவடிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்கவில்லை என்றால் 1.5 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.