ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் எந்த ஒரு உயிரிழப்பும் நடக்கவில்லை: ஆளுநர் பேச்சு
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கடந்த பத்து நாட்களில் எந்த ஒரு உயிரிழப்பும் நடக்கவில்லை என்று பிரதேச ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவிப்பை வெளியிட்டது.
இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு வசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதுதான் மிக மெதுவாக அங்கு இயல்பு நிலை திரும்பிவருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த பத்து நாட்களில் எந்த ஒரு உயிரிழப்பும் நடக்கவில்லை என்று பிரதேச ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்,
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடந்ததில்லை. தகவல்தொடர்பின்மை உயிரைக் காப்பாற்ற உதவினால், அதனால் என்ன தீங்கு?
கடந்த காலத்தில் காஷ்மீரில் ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை நேரிட்டாலே சுமார் 50 பேர் முதல்வாரத்திலே உயிரிழக்கும் சம்பவம் நேரிட்டது. இப்போது இந்திய அரசு மனித உயிர்களை இழக்க கூடாது என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது.
10 நாட்களுக்கு மொபைல் போன்கள் சேவை மட்டும் இல்லாமல் இருக்கட்டும், மாநிலத்தில் மிக விரைவில் இயல்புநிலையை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.