பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.
பண்பட்ட, நாகரிகமிக்க அரசியல் தலைவராக விளங்கிய ஜேட்லியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை காலை வைக்கப்பட்டது.
மறைந்த அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்குகள், தில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.