பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லியின் மறைவையடுத்து, டெல்லியில் பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சுவாசப் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அவை எதுவும் பலனளிக்காத நிலையில் சனிக்கிழமை நண்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜேட்லியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பாஜக தலைமையகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அதிமுக சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அஞ்சலி செலுத்தினார்.
ஜேட்லியின் குடும்பத்தினர் மற்றும் பாஜகவினருக்கு அதிமுக மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
மறைந்த அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்குகள், தில்லியிலுள்ள நிகம்போத் காட் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.