ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீதான தடை: உச்சநீதிமன்றம் தலையிட பிரஸ் கவுன்சில் மனு

ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட வேண்டுமென்று இந்திய பிரஸ் கவுன்சில் (பிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட வேண்டுமென்று இந்திய பிரஸ் கவுன்சில் (பிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.
 ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவுக்கும், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
 இதையடுத்து, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதள சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
 இந்நிலையில், அங்கு பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கக் கோரி "காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவு, கருத்து தெரிவிக்கும் உரிமையை அளிக்கிறது. இது பத்திரிகையாளர்களுக்கு அடிப்படையாகும். ஜம்மு-காஷ்மீரில் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது சட்டப்பிரிவுகளில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதற்கான உரிமையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 இந்நிலையில், இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பிசிஐ ஆதரவளிக்கிறது. இக்கட்டான சூழலில் பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவசியமாகும். எனினும், அனுராதா பாசின் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுவும் முக்கியமான பிரச்னையாகும்.
 எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தகுந்த தீர்வு காண வேண்டும். இந்த வழக்கின்போது, எங்கள் தரப்பு வாதங்களைத் தெரிவிக்கத் தயாராக உள்ளோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com