கேரள மாநிலம், கொச்சியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் ஊடுருவதற்கு திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உதவியதாக தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறையினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனினும், கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து ஒரு நபரை காவல் துறையினர் அழைத்துச் செல்வதாக கேரள ஊடகங்களில் விடியோ வெளியானது.
இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் வழக்குரைஞர் சனிக்கிழமை கூறியதாவது:
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், பஹ்ரைனில் இருந்து 2 நாள்களுக்கு முன்புதான் இந்தியா வந்தடைந்தார். அவரையும், மற்றொரு பெண்ணையும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று காவல் துறையினர் கைது செய்தனர். தனது அடையாள அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கும், பயங்கரவாதிகள் ஊடுருவியதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதையடுத்து அவர் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று வழக்குரைஞர் கூறினார்.
இதனிடையே, கொச்சியில் உள்ள காவல் துறை விருந்தினர் மாளிகையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.