லக்னௌ: நிலவில் சந்திராயன் - 2 இறங்குவதை பிரதமர் மோடியுடன் அமர்ந்து பார்க்க இரண்டு மாணவர்களை தேர்வு செய்வதாக, உத்தர பிரதேச பள்ளிகளில் வினாடி வினா நடைபெற உள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு படிநிலைகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திராயன் -2 நிலவின் பரப்பில் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலவில் சந்திராயன் - 2 இறங்கும் சரித்திர நிகழ்வை பிரதமர் மோடியுடன் சேர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் அமர்ந்து பார்க்க இரண்டு மாணவர்களை தேர்வு செய்வதாக, உத்தர பிரதேச பள்ளிகளில் வினாடி வினா நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசுப் பள்ளிகளில் இருந்து இரண்டு மாணவர்கள் இதற்காக வினாடி வினா போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவராகள் என்று தெரிகிறது. இதற்காக போட்டிகளை உடனே நடத்துமாறு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய ராகவன், உ.பி மாநில தலைமைச் செயலாளர் அனூப் பாண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆராதனா ஷுக்லா கூறியதாவது:
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கு பெறலாம். மாணவர்களுக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாகும்.போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் மாணவர்களை இறுதி செய்வோம்.
இதுதொடர்பாக மாவட்ட வாரியாக சம்மந்தப்பட்ட பள்ளி முதல்வர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி உடனடியாக பணிகளை துவக்க, மாவட்ட கல்வி ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.