புது தில்லி: பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்து தெரிவிப்பதா என்று காங்கிரசின் ராகுல் காந்தியிடம் பாஜக மன்னிப்பைக் கோரியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கூட உறுதிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதையடுத்து காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்து தெரிவிப்பதா என்று காங்கிரசின் ராகுல் காந்தியிடம் பாஜக மன்னிப்பைக் கோரியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதை விமர்சித்து காங்கிரசின் ராகுல் காந்தி பேசியது வெட்கக்கேடானது.
ராகுல் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கருத்து தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேசமே கொந்தளித்து எழுந்ததன் விளைவு இது. அரசியல் கட்டாயங்களின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.
அத்துடன் காஷ்மீருக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு ராகுல் காந்தி சென்றது பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.
நாட்டையே அவமானப்படுத்தியுள்ளதன் காரணமாக காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.