புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் புதனன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் வரும் 2021-22 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவக்கல்லூரிகளைத் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் புதிதாக 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். அதேபோல மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளில் 00 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும்.
நாட்டில் கையிருப்பில் உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
தேசிய பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பை இதற்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் செப்.,23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநாட்டைப் பிரதமர் மோடி துவக்கி வைப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.