பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான இந்தத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதேசமயம், வாக்குச்சாவடி வாரியாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 30 வரை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலப் பிரிவுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.
எங்கள் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கூடுதல் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே" என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2014 முதல் பாஜகவின் தேசியத் தலைவராக உள்ளார். கட்சியின் விதிப்படி, ஒரு தலைவர் இரண்டு பொறுப்புகளை வகிக்கக் கூடாது. இதனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.