பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்று ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி (73) மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்மாநிலத்தைச் சேர்ந்த பிலாஸ்பூர் மாவட்ட காவல்நிலையத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர் பிரிவு ஒழுங்குமுறை அடிப்படையில் 10-ஆவது பிரிவின் கீழ் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தான் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்த போலி சாதிச்சான்று விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிணையில் வெளிவர முடியாத இந்த வழக்கின் அடிப்படையில் 2 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தன் மீது சத்தீஸ்கர் போலீஸார் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அஜித் ஜோகி வெள்ளிக்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கன்வார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக தன்னை அடையாளப்படுத்தி வரும் அஜித் ஜோகி சாதி விவகாரம் தொடர்பாக கடந்த சில வருடங்களாக பிரச்னை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.