டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ரோஹிணி செக்டார் -2 என்ற பகுதியைச் சேர்ந்த சங்கீதா(23) என்பவர் ஐந்து மாத கர்ப்பிணி. இவரது கணவர் கோவிந்த், அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது, பெண்ணின் வீட்டார் வரதட்சணையாக பேசிய தொகையை கொடுக்கவில்லை என்பதால், கோவிந்த் அடிக்கடி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் நேற்று அவரிடம், கணவர் கோவிந்த் சண்டையிட்டுள்ளார். இதனால், மனமுடைந்த சங்கீதா, அவர் வசிக்கும் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறும்போது, 'தற்கொலை செய்துகொண்ட சங்கீதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது கணவர் கோவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.