
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுடன், மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தியப்பிரதேச முதல்வருமான கமல்நாத் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத் கூறியதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் சூழல் தொடர்பாக சோனியாவுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது மத்தியப்பிரதேசத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவரை நியமிப்பது தொடர்பாக முக்கியமாக ஆலோசித்தோம்.
நான் முதல்வராகப் பதவியேற்றது முதல் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சூழல் காரணமாக மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவராக நான் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே தற்போதும் அதை தான் வலியுறுத்தினேன். இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...