உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016, பிப்ரவரி 18ம் தேதி மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு தற்போது 50 வயது. குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.56,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இதுகுறித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் குமார் கூறுகையில், 'சுமார் 4 மாதங்களாக சிறுமி, அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும், இதனை யாருக்கேனும் தெரியப்படுத்தக்கூடாது என்று அவர் சிறுமியை அச்சுறுத்தியும் வந்துள்ளார், ஒருகட்டத்தில் சிறுமி இதனை வெளியில் சொல்லவே, அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.