வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வினோதமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதுமே வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று மக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெங்காய விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வினோதமான முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இளைஞர் பிரிவு, நேற்று வாரணாசியில், கவுன்டர் போட்டு மக்களுக்கு வெங்காயத்தை கடன் வழங்கினர். இதற்கு மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை பாதுகாப்பாக அடமானம் வைத்துவிட்டு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
வெங்காய விலை ஏற்றத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வதற்காகவே இவ்வாறு செய்கிறோம் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து மாநில சட்டப்பேரவைக்கு வெளியே ஒரு கிலோ வெங்காயத்தை ரூ .40-க்கு விற்றனர்.
காங்கிரஸ் தலைவர் ஷைலேந்திர திவாரி இதுகுறித்து கூறுகையில், ' மானியர்களின் வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்க்க தயாராக இல்லை,. எனவே, வெங்காயத்தை வாங்கி நியாயமான விலையில் விற்கிறோம். அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை, வீட்டு வரவு செலவுத் திட்டத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது. மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கவில்லை என்ற உண்மையை எடுத்துக்காட்டுவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம்' என்று கூறினார்.
இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100-யைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.