நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளின் தரத்தை மேம்படுத்துங்கள் என்று மக்களவை எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று கேள்வி நேரத்தின்போது எம்.பிக்கள் பலர் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தின் போது சபையில் எழுப்பும் கேள்விகளின் தரத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியதுடன், மாநில பிரச்னைகளை மாநில அரசுகள் தான் கையாள வேண்டும், மத்திய அரசு அதில் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மற்றும் ரத்லம் பகுதிகளில் உள்ள மூன்று கோவில்களில் குடிநீர் குழாய்களை நிறுவவும், சாலைகள் மற்றும் யாத்ரீகர்கள் தங்கும் இடங்களை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச மாநிலத்தின் எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பியபோது சபாநாயகர் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், 'மாநில அரசின் கீழ் வரும் கோவில்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. இது மாநில அரசு சம்மந்தப்பட்ட விஷயம். எனவே இவ்வாறான கேள்விகளை கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்' என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.