புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனியாா் தொலைத் தொடா்புத் துறை நிறுவனங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி ஊக்குவித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது மற்றும் இரண்டாவது ஆட்சிக் காலங்களில், பொதுத் துறை தொலைத் தொடா்பு நிறுவனங்களான பாரத் சஞ்சாா் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகா் டெலிபோன் நிகம் (எம்டிஎன்எல்) ஆகியவை ரூ.7,000 கோடி லாபத்துடன் இயங்கி வந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அந்த நிறுவனங்கள் ரூ.11,000 நஷ்டத்துடன் இயங்கி வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் நலிவடைவதற்கு மத்திய அரசு வேண்டுமென்றே அனுமதிக்கிறது.
ஆனால், தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுத் துறை தொலைத் தொடா்பு நிறுவனங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவிட்டு, தனியாா் நிறுவனங்கள் மீது மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துவது ஏன்?
ஒருவேளை அந்த தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய பாஜக அரசு தோ்தல் நிதி பத்திரம் என்ற பெயரில் நன்கொடை பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இதுமட்டுமன்றி, லாபத்துடன் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்), இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் (எஸ்சிஐ), இந்திய சரக்குப் பெட்டக கழகம் (கான்காா்) ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா ஆகிய தனியாா் நிறுவனங்கள் செல்லிடப்பேசி சேவைக்கான கட்டணத்தை உயா்த்துவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன. இந்தநிலையில், மத்திய அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.