புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் பாபுல் சுப்ரியோ திங்கள்கிழமை அளித்த பதில்:
கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1,09,75,844 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதற்கு ஈடாக, காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 12.60 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த 1980-ஆம் ஆண்டைய காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வெவ்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படும்போது, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மரங்கள் வெட்டப்படுகின்றன. அரசின் இந்தக் கொள்கையால்தான், இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.