தெலங்கானா ஆர்டிசி பேருந்து கட்டணங்கள் உயர்வு இன்று முதல் அமல்: மக்கள் அவதி
By DIN | Published on : 03rd December 2019 12:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தெலங்கானா ஆர்டிசி பேருந்து கட்டணங்கள் விலை உயர்வு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2016-க்கு பிறகு தற்போது மீண்டும் பேருந்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. பேருந்துகளின் பயண தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பயணச்சீட்டு, மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயணச்சீட்டுகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டணமாக ஒரு கி.மீ.க்கு குறைந்தபட்சம் 20 பைசா வரை அதிகரிக்கப்பட்டது. இதனால் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த ரூ.6 மற்றும் ரூ.10 கட்டணங்கள் இனி குறைந்தபட்சமாக ரூ.10 மற்றும் ரூ.15-ஆக அதிகரித்தது. இதனால் முன்பு 40 கி.மீ. தொலைவுக்கு ரூ.30-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.35-ஆக உயர்ந்தது.
மெட்ரோ சொகுசுப் பேருந்துகளில் 40 கி.மீ. தொலைவுக்கு ரூ.30-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.45-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்லே வேலுகு வகைப் பேருந்துகளில் முன்பு 120 கி.மீ. தூரப் பயணத்துக்கு ரூ.73-ஆக வசூலிக்கப்பட்ட கட்டணம், இந்த விலை உயர்வின் காரணமாக ரூ.100-ஆக அதிகரித்தது.
தற்போது டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.71-ஆக உயர்ந்திருப்பதால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை இனியும் ஈடுசெய்ய முடியாதது தான் பேருந்து கட்டண விலை ஏற்றத்துக்கு காரணம் என ஆர்டிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விமான நிலையம் செல்லும் பேருந்துகள் மற்றும் குளிர்ச்சாதனப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், தினசரி பேருந்துகளின் மூலம் பயணம் செய்வோருக்கு மாதம் கூடுதலாக ரூ.300 முதல் ரூ.500 வரை செலவிட நேரிடும். மேலும் கடந்த இரு மாதங்களாக ஆர்டிசி ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக அவதிப்பட்ட நிலையில், தற்போது பேருந்து கட்டணங்களின் உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.