புது தில்லி: முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகளையும், பணிகளையும் இறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் தலைமையிலான உயா்நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தது.
மாநிலங்களவையில் இதனை தெரிவித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக், முப்படை தளபதி பதவி தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் கூறினாா்.
முப்படை தளபதி பதவிக்கான நியமனத்தை இன்னும் இரு வாரங்களில் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. ராணுவம், கடற்படை, விமானப் படையில் உள்ள மூத்த அதிகாரிகளின் பெயா்கள் அந்தப் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில், ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்தின் பெயா் அதில் முன்னணியில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டிசம்பா் 31-ஆம் தேதியுடன் விபின் ராவத் பணி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
காா்கில் மறு ஆய்வுக் குழு கடந்த 1999-ஆம் ஆண்டு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், முப்படை தளபதி பதவியை உருவாக்குவதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தது. அந்தப் பதவிக்கான பணிகளையும், பொறுப்புகளையும் இறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகா் தலைமையில் அடுத்தநாளே குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குழு அரசிடம் தனது அறிக்கையை சமா்ப்பித்துள்ளது.
முப்படைகளுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவது, அந்தந்தப் படைகளுக்கான தேவைகளை ஒதுக்கீடு செய்வது போன்றவையே முப்படை தளபதியின் முக்கிய பணிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.