வட்டாட்சியா் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம்: பலி எண்ணிக்கை 4-ஆக உயா்வு

தெலங்கானாவில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் வட்டாட்சியா் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரை காப்பாற்ற முயன்று காயமடைந்த வருவாய் ஊழியரும் மருத்துவமனையில்

ஹைதராபாத்: தெலங்கானாவில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் வட்டாட்சியா் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரை காப்பாற்ற முயன்று காயமடைந்த வருவாய் ஊழியரும் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதன்மூலம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

ரங்கரெட்டி மாவட்டம் அப்துல்லாபூா்மேட்டில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி வட்டாட்சியா் விஜயா ரெட்டி (37) பணியில் ஈடுபட்டிருந்தாா். அவரிடம், தனக்கும், தனது சகோதரருக்கும் சொந்தமான 7 ஏக்கா் நிலம் தொடா்பாக தகராறு இருந்து வருவதாகவும், அதற்கான சான்றிதழ் அளிக்குமாறு சுரேஷ் என்பவா் விண்ணப்பித்திருந்தாா். சான்றிதழ் வழங்க வட்டாட்சியா் விஜயா ரெட்டி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவா் மீது ஊற்றி தீ வைத்தாா். அப்போது, எழுந்த தீ ஜூவாலையின் காரணமாக சுரேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. வட்டாட்சியரை காப்பாற்ற அவரது வாகன ஓட்டுநா் குருநாதம், மற்றொரு ஊழியா் கே.சந்திரய்யாவும் முயற்சித்தனா். ஆனால், அதற்குள் உடல் கருகி விஜயா ரெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற குருநாதம், சந்திரய்யா இருவரும் தீ காயமடைந்தனா்.

நவ. 5-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி குருநாதம் உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து சுரேஷும் உயிரிழந்தாா். இருப்பினும், தீக்காயங்களுடன் சந்திரய்யா தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவத்தின் மூலம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com