ப. சிதம்பரம் 106 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் மற்றும் வஞ்சகம் நிறைந்த செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஆதாரங்களை அழிக்கக் கூடாது என்றும், சாட்சியங்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.
விடுதலையாகிறார் சிதம்பரம்: அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,
"ப. சிதம்பரம் 106 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் மற்றும் வஞ்சகம் நிறைந்த செயலாகும். உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நியாயமான விசாரணையின் மூலம் தான் குற்றமற்றவர் என்பதை அவரால் நிரூபிக்க முடியும் என நான் நம்புகிறேன்" என்றார்.