நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி வினய் சர்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தில்லி அரசு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என தில்லி அரசு பரிந்துரைத்தது.
இதுகுறித்து தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற உறுதியான பரிந்துரையை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
தில்லி அரசின் இந்த பரிந்துரை மீது துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தனது கருத்தைப் பதிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற தில்லி அரசின் பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று (புதன்கிழமை) கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணத்தை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
தில்லி அரசின் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, அதன்பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பார்வைக்கு அனுப்பவுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பான இறுதி முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எடுப்பார்.