புது தில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 15-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா்.பானுமதி தலைமையிலான அமா்வு இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு, கடந்த 106 நாட்களாக திகார் சிறையில் இருந்த நிலையில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, அவர் இன்றோ அல்லது நாளையோ சிறையில் இருந்து விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் தற்போது அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம் ஜாமீன் தொகை மற்றும் இரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளையும் பிறப்பித்துள்ளது.
அதன்படி,
சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது.
வழக்கு தொடர்பாக சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது.
வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க.. இந்திய பொருளாதாரத்தைகடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்