மிர்ஸாபுர்: பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிஆர்பிஎஃப் வீரர் மற்றும் ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரியின் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காரில் போலீஸ் என்று லோகோ ஒட்டப்பட்டிருந்ததே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரியின் மகன் ஜெய்பிரகாஷ்.
இவர் தனது சகோதரியைப் பார்க்க அடிக்கடி ஹலியா கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கே ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி இந்த பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், தனது மகளை செல்போனில் அழைத்த ஜெய்பிரகாஷ், கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அங்கே, அவர் காரில் தனது மூன்று நண்பர்களுடன் இருந்துள்ளார், சிறுமி அங்குச் சென்றதும் அவளைக் கடத்திச் சென்று நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஜெய் பிரகாஷ் பயன்படுத்திய காரில் போலீஸ் லோகோ இருந்தது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.