ஹைதராபாத் என்கவுன்டரில் ஈடுபட்ட போலீஸார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக ஹரியாணா தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் அல்லது குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெலங்கானா மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாருக்கு இனிப்பு வழங்கி தெலங்கானா மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தின் தலைவர் நரேஷ் செல்பார் என்பவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, என்கவுன்டரில் ஈடுபட்ட தெலங்கானா போலீஸார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இதனை மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.