'காவல்துறையினர் சிறப்பான நீதியை வழங்கியுள்ளனர்' - தேசிய பெண்கள் ஆணையம் கருத்து
ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை - கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பான நீதியை வழங்கியுள்ளனர் என்று தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் மக்கள் முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா இதுகுறித்து பேசுகையில், 'நாட்டின் ஒரு பொதுவான குடிமக்களாக அனைவரும் விரும்பிய முடிவு இது. இந்த முடிவு எனக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் இது சட்ட அமைப்பின் மூலமாக சரியான முறையில் நடந்திருக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்தது. காவல்துறையினர் சிறப்பான நீதியை வழங்கியுள்ளனர். ஆனால், எந்த சூழ்நிலையில் இது நடந்தது என்று தெரியவில்லை' என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவரின் வீட்டிற்கு நேரில் சென்று தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.