தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திங்கட்கிழமை தாக்கல் செய்தார். தொடர்ந்து, இதனை அறிமுகப்படுத்துவதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் 293 எம்பிக்கள் ஆதரவும், 82 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.