கர்நாடக பேரவை இடைத்தேர்தல்: 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை

கர்நாடக சட்டப்பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 11 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
Karnataka BJP candidate
Karnataka BJP candidate

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 11 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (டிச.9) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர். இதனிடையே, இந்த 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதிநீக்கப்பட்டது செல்லும்; ஆனால் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இடைத்தேர்தல்: இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் நீங்கலாக அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இத் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 165 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 15 தொகுதிகளில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன.

வாக்குப் பதிவு: டிச.5ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 15 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 37,77,984 வாக்காளர்களில் 25,65,469 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 67.91 சதமாகும்.

வாக்கு எண்ணிக்கை: 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.

முக்கியத்துவம்: இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களை பாஜக கைப்பற்றினால் பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளலாம்.

பாஜக போதுமான இடங்களில் வெல்லாவிட்டால், காங்கிரஸும் மஜதவும் மீண்டும் கூட்டணி அமைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com