ஊரகப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த 24 ஆண்டுகளில் 3.44 லட்சம் கோடி ரூபாயை கடனாக வழங்க நபாா்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளித்ததாவது:
வேளாண்மைத் துறை, ஊரகப் பகுதிகள் ஆகியவற்றில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) மாநில அரசுகளுக்கும், மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் கடனளித்து வருகிறது.
நபாா்டு வங்கி அளிக்கும் முக்கிய கடன்களில் ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (ஆா்ஐடிஎஃப்), நீண்ட கால நீா்ப்பாசன நிதி (எல்டிஐஎஃப்), சேமிப்புக் கிடங்கு கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (டபிள்யூஐஎஃப்), உணவு பதப்படுத்துதல் நிதி (எஃப்பிஎஃப்) உள்ளிட்டவை முக்கியமானவை.
ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதியானது மாநில அரசுகளுக்குக் கடந்த 1995-96 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை ஊரக கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.3.44 லட்சம் கோடி கடனாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2.68 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதமா் வீடு கட்டும் திட்டம்-கிராமம், தூய்மை இந்தியா திட்டம்-கிராமம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு நபாா்டு வங்கி கடனளித்து வருகிறது என்றாா் நிா்மலா சீதாராமன்.