நியூ யார்க்: உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றிருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
தி ஃபோர்ப்ஸ் 2019 தயாரித்த 'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல்' வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எச்சிஎல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் செயல் இயக்குநர் ரோஷினி நாடார் மல்கோத்ரா மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்-ஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்திலும், அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்டே இரண்டாம் இடத்திலும், அமெரிக்க சபையின் ஸ்பீக்கர் நான்சி பெலோஸி 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா 29வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், அரசுப் பதவிகளை வகிப்பவர்கள், வணிகத்தில் முன்னணியில் இருப்பவர்கள், ஊடகம் என பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம்.
2019ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில், புது முகமாக இடம்பெற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் முதல் பெண் மத்திய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஏற்கனவே இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.