சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் என்றும் உடலில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தலாம் என்றும் பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, வியாழக்கிழமை மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி கணேஷ் சிங், 'சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும். உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்கும். அமெரிக்க கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது' என்று கூறியுள்ளார். இவரது கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் பேசிய அவர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, சமஸ்கிருதத்தில் கணினி நிரலாக்கங்கள் செய்யப்பட்டால், அது குறைபாடற்றதாக இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, சில இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகில் 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசுகையில், 'சமஸ்கிருத மொழி மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது. ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். Cow, Brother போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை. பழமையான மொழியை ஊக்குவிப்பதன் மூலமாக மற்ற மொழிகள் ஒருபோதும் பாதிக்கப்படாது' என்றும் கூறினார்.